⭐
சுப்ரபாதம் | சிவன் பாடல்
Suprabhatham | Shiva Song
திருப்பள்ளியெழுச்சி
Thiruppalliyezhuchi
போற்றி! என்வாழ் முதல் ஆகிய பொருளே! புலர்ந்தது; பூங்கழற் கிணைதுணை மலர்கொண்டு
ஏற்றிநின் திருமுகத்து எமக்கருள் மலரும் எழில்நகை கொண்டுநின் திருவடி தொழுகோம்!
சேற்றிதழ்க் கமலங்கண் மலரும்தண் வயல்சூழ் திருப்பெருந் துறையுறை சிவபெருமானே!
ஏற்றுயர் கொடியுடையாய்! எனை உடையாய்! எம்பெருமான் பள்ளி எழுந்தருளாயே!
அருணன் இந்திரன் திசை அணுகினன்! இருள்போய் அகன்றது; உதயம் நின் மலர்த் திரு முகத்தின்
கருணையின் சூரியன் எழ எழ, நயனக் கடிமலர் மலர மற்றண்ணல் அங்கண்ணாம்
திரள் நிரை அறுபதம் முரல்வன; இவையோர் திருப்பெருந் துறையுறை சிவபெருமானே!
அருள் நிதி தரவரும் ஆனந்த மலையே! அலைகடலே பள்ளி எழுந்தருளாயே!
கூவின பூங்குயில்; கூவின கோழி; குருகுகள் இயம்பின; இயம்பின சங்கம்;
ஓவின தாரகை ஒளி; ஒளி உதயத்து ஒருப்படுகின்றது; விருப்பொடு நமக்குத்
தேவ! நற் செறிகழற் றாளிணை காட்டாய்; திருப்பெருந் துறையுறை சிவபெருமானே!
யாவரும் அறிவரியாய்; எமக்கெளியாய் எம்பெருமான் பள்ளி எழுந்தருளாயே!
இன்னிசை வீணையர் யாழினர் ஒருபால்! இருக்கொடு தோத்திரம் இயம்பினர் ஒருபால்;
துன்னிய பிணைமலர்க் கையினர் ஒருபால்; தொழுகையர் அழுகையர் துவள்கையர் ஒருபால்;
சென்னியில் அஞ்சலி கூப்பினர் ஒருபால்; திருப்பெருந் துறையுறை சிவபெரு மானே!
என்னையும் ஆண்டுகொண்டு இன்னருள் புரியும் எம்பெருமான் பள்ளி எழுந்தரு ளாயே!
"பூதங்கள் தோறும் நின்றாய்!" எனின் அல்லால் "போக்கிலன் வரவிலன்" என நினைப் புலவோர்
கீதங்கள் பாடுதல் ஆடுதல் அல்லால் கேட்டறியோம் உனைக் கண்டறிவாரைச்
சீத்தங்கொள் வயல்திருப் பெருந்துறை மன்னா! சிந்தனைக் கும் அரியாய்! எங்கண் முன்வந்து
ஏதங்கள் அறுத்தெம்மை ஆண்டருள் புரியும் எம்பெருமான் பள்ளி எழுந்தருளாயே!
பப்பற வீட்டிருந் துணரும் நின் அடியார் பந்தனை வந்தறுத்தார் அவர் பலரும்
மைப்புறு கண்ணியர் மானுடத்தியல்பின் வணங்குகின்றார் அணங்கின் மணவாளா!
செப்புறு கமலம் கண் மலருந்தண்வயல் சூழ் திருப்பெருந் துறையுறை சிவபெருமானே!
இப்பிறப் பறுத்தெமை ஆண்டருள் புரியும் எம்பெருமான் பள்ளி எழுந்தருளாயே!
அதுபழச் சுவையென அமுதென அறிதற்கு அரிதென எளிதென அமரரும் அறியார்;
இதுஅவன் திருவுரு, இவன் அவன் எனவே எங்களை ஆண்டுகொண்டு இங்கெழுந்தருளும்
மதுவளர் பொழில்திரு உத்தரகோச மங்கையுள்ளாய்! திருப்பெருந்துறை மன்னா!
எது எமைப் பணிகொள்ளும் ஆறு? அது கேட்போம்; எம்பெருமான் பள்ளி எழுந்தருளாயே!
முந்திய முதல் நடு இறுதியும் ஆனாய்! மூவரும் அறிகிலர் யாவர் மற்று அறிவார்?
பந்தணை விரலியும் நீயும் நின் அடியார் பழங்குடில் தொறும் எழுந்தருளிய பரனே!
செந்தழல் புரைதிரு மேனியும் காட்டித் திருப்பெருந்துறை யுறை கோயிலும் காட்டி
அந்தணன் ஆவதும் காட்டிவந்து ஆண்டாய்! ஆரமுதே! பள்ளி எழுந்தருளாயே!
விண்ணகத் தேவரும் நண்ணவும் மாட்டா விழுப் பொருளே! உனதொழுப் படியோங்கள்
மண்ணகத்தே வந்து வாழச் செய்தானே வண்திருப் பெருந்துறையாய் வழி அடியோம்
கண்ணகதே நின்று களிதரு தேனே! கடலமுதே! கரும்பே! விரும்படியார்
எண்ணகத்தாய்! உலகுக்கு உயிரானாய்! எம்பெருமான் பள்ளி எழுந்தருளாயே!
"புவனியிற் போய் பிறவாமையின் நாள் நாம் போக்குகின்றோம் அவமே இந்தப் பூமி
சிவன் உய்யக் கொள்கின்ற வாறென்று" நோக்கித் திருப்பெருந் துறையுறைவாய்! திருமாலாம்
அவன் விருப்பெய்தவும் மலரவன் ஆசைப் படவும் நின் அலர்ந்த மெய்க் கருணையும் நீயும்
அவனியிற் புகுந்தெமை ஆட்கொள்ள வல்லாய்! ஆரமுதே பள்ளி எழுந்தருளாயே!
| விவரம்Detail | தமிழ்English |
|---|---|
| 🙏 தெய்வம்🙏 Deity | சிவன்Shiva |
| 🎵 வகை🎵 Category | சுப்ரபாதம்Suprabhatham |
📱 முழு பாடல் தொகுப்பிற்கு ஆப் டவுன்லோட் செய்யுங்கள்!
📱 Download App for Full Song Collection!
🕉️ © 2026 Tamil Star Calendar | tamilstarcalendar.com
இந்த உள்ளடக்கம் tamilstarcalendar.com சொத்து. அனுமதியின்றி நகலெடுப்பது சட்டவிரோதம். Content belongs to tamilstarcalendar.com. Unauthorized copying is prohibited by law.
🌐 www.tamilstarcalendar.com